
புத்தளம் உட்பட பல பிரதேசங்களில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக, தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
உற்பத்திக்குத் தேவையான நீரை விநியோகிக்கும் நீர்ப்பம்பிகளை இயக்குவதற்கு போதிய எரிபொருள் இல்லாததாலே,இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தொழில்துறையினர் விசனம் தெரிவிக்கின்றனர்.புத்தளம் உப்பு வெளியில், நாலாயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்குத் தேவையான நீர்,பம்பிகள் மூலமே விநியோகிக்கப்படுகிறது.
ஆனால், நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் நெருக்கடியால் நீர்ப்பம்பிகளை இயக்குவதற்கு எரிபொருள் இல்லாதுள்ளது.
இதனால்,தொழிற்சாலைகள் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் தொழில்துறையினர் கூறுகின்றனர்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இம்முறை ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியால், உப்பு உற்பத்தி முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனால், விரைவில் சந்தையில் உப்புக்கு அதிக கிராக்கி ஏற்பட்டு, உப்புக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்படும் எனவும், தொழில்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தொழில் மூலம் 10,000 குடும்பங்கள் நன்மையடைகின்றன.ஆனால் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியால், கூலி கொடுக்க முடியாமல் முதலாளிமார்கள் கடும் நிதி நெருக்கடியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இம்முறை சிறிதளவு அறுவடை செய்யப்பட்ட உப்பை ஏற்றிச் செல்வதற்கு லொறிகளுக்குத் தேவையான டீசலும் கிடைக்கவில்லை. இதனால், உப்பை சந்தைக்கு கொண்டு செல்வதில் பல சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.
வனாத்தவில்லு குறூப் நிருபர்
தினகரன்

0 Comments