புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் பாராளுமன்ற தேர்தலின் போது போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் சுதந்திர கட்சி வாக்களிக்க போவதில்லை.பல வேட்பாளர்கள் போட்டியிடாமல் பேச்சுவார்த்தை ஊடாக ஒருமித்த தீர்வு காண்பது அவசியமானதாக அமையும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி காரியாலயத்தில் 16 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டு மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகினார். பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மக்களாணை கிடையாது. ஜனாதிபதியாக பதவி வகிப்பவர் நாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவராக காணப்பட வேண்டும்.
பொதுத்தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் பதில் ஜனாதிபதியாக பதவி வகிப்பது கூட மக்களாணைக்கு முற்றிலும் விரோதமானது என்ற காரணத்தினால் பதில் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவிக்கான பாராளுமன்றத்தினுடனான வாக்கெடுப்பு எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
ஒருவரை தெரிவு செய்வதற்காக தற்போது பலர் போட்டியிட தயார் என குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.இவ்வாறான பின்னணியில் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து எவ்வாறு மீள முடியும்.
பலர் போட்டியிடாமல் ஒருமித்த பேச்சுவார்த்தை ஊடாக ஒருவரை வேட்பாளராக முன்னிலைப்படுத்தி வாக்கெடுப்பில்லாமல் இடைக்கால புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வது தற்போதைய நிலைமைக்கு சிறந்ததாக அமையும் என வலியுறுத்தியுள்ளோம்.
முன்வைக்கப்பட்ட யோசனைக்கு சாதமான பதில் கிடைக்காத காரணத்தினால் வாக்கெடுப்பின் போது எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்காமலிருக்க சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது என்றார்.


0 Comments