
(இன்று (15/07/2022) இந்தியா, இலங்கையில் வெளியாகும் நாளிதழ்கள் மற்றும் இணையத்தில் வெளியான செய்திகளில் சிலவற்றை உங்களுக்காக தொகுத்து வழங்குகிறோம்.)
பாஜகவின் 'ஆபரேஷன் கமல்' திட்டம் மூலம் குடியரசுத் தலைவர் தேர்தலிலும் பணம் விளையாடுவதாக யஷ்வந்த் சின்ஹா குற்றம்சாட்டியுள்ளதாக, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ள யஷ்வந்த் சின்ஹா நேற்று மத்திய பிரதேசம் சென்று காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் ஆதரவு திரட்டினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "குடியரசுத் தலைவர் தேர்தலில் கூட பாஜக, 'ஆபரேஷன் கமல்' திட்டத்தை அரங்கேற்றுகிறது. அதன்படி தங்கள் வேட்பாளரை வெற்றி பெறச்செய்ய பாஜக அல்லாத உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய அளவில் பணம் கொடுத்து வருகிறது.
இது குறித்த நம்பத்தகுந்த தகவல்கள் தனக்கு கிடைத்துள்ளதாகவும், சுதந்திரமான, நேர்மையான தேர்தல் முடிவை கண்டு பாஜக அஞ்சுவதாகவும் யஷ்வந்த் சின்ஹா குற்றம்சாட்டியதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்து குடியரசு தலைவர் தேர்தலை நடத்தும் மாநிலங்களவை செயலரும், தேர்தல் ஆணையரும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் யஷ்வந்த் சின்ஹா கேட்டுக்கொண்டார்.

0 Comments