
ஈக்வடோரில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை கைவிடுவதற்கு அந்நாட்டு பழங்குடி தலைவர்கள் அரசாங்கத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.
அதிகரித்துள்ள எரிபொருள் மற்றும் உணவு விலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளை முடக்கியதோடு பேரணிகளை நடத்தினர்.
சில ஆர்ப்பாட்டங்களில் வன்முறை வெடித்த நிலையில் பாதுகாப்பு படையினருடனான மோதல்களில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இந்த உடன்படிக்கையின் ஓர் அங்கமாக, எரிபொருள் கலன் ஒன்றின் விலையை 15 வீதம் குறைப்பதற்கு ஈக்வடோர் அரசு இணங்கியுள்ளது.
எண்ணெய் உற்பத்தி நாடான ஈக்வடோரில் கடந்த 2020க்குப் பின் டீசல் விலை கிட்டத்தட்ட இரட்டிப்பாகி உள்ளதோடு பெட்ரோல் விலை வேகமாக அதிகரித்துள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியதன் பாதி அளவு சலுகையை வழங்கவே அரசு இணங்கியபோதும், அது ஆண்டு ஒன்றில் நாட்டுக்கு 340 மில்லியன் டொலர் இழப்பை ஏற்படுத்தும் என்று ஈக்வடோர் நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எதிர்கால சுரங்கம் மற்றும் எண்ணெய் அபிவிருத்தி வேலைகள் மற்றும் ஏனைய விரிவாக்க பணிகளில் பழங்குடிகளின் ஆலோசனையை பெறுவதற்கும் அரச பேச்சுவார்த்தையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

0 Comments